அப்போது எனக்கு பதின்நான்கு வயது ஆண்டு எட்டில், முதல் முதலில் கணணி என்ற சொல்லை அறிந்த காலம் அது எங்கள் பாடசாலையில் படித்து வெளிநாடு சென்ற பழைய மாணவர் ஒருவர் பாடசாலைக்கு நன்கொடையாக கொடுத்ததால் அதை அன்று அறிய முடிந்தது. முதலில் அதை கணணி என்று சொல்லவில்லை பாடசாலை முழுவது இதுதான் பேச்சு ஒரு இயந்திரம் கொண்டு வந்திருக்கிறார்கள் அது ஒருவரின் கையை அதில் அழுத்தினால் அவரை பற்றி எல்லா விடயங்களையும் சொல்லிவிடுமாம் இதுவரை நாங்கள் என்னென்ன தவறுகள் செய்தோம் சொன்ன பொய்கள் எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிடுமாம் இப்படியாக அதை ஒரு மந்திரவாதியை விமர்சிப்பதை போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயங்களை சொல்லி பயமுறுத்திக்கொண்டு இருந்தனர். போது கூட்டத்தில் அதிபர் அதை அறிமுகம் செய்து வைக்கும் வரை எங்கள் பயம் போகவில்லை. அப்படி இருந்தும் எங்களால் அன்று அதை தூர நின்று பார்க்க முடிந்ததே தவிர அதை இயக்க முடியவில்லை அதற்க்கு காரணம் அப்போது ஈழத்தில் மின்சாரம் இருக்கவில்லை எப்போதாவது உயர்தரம் படிக்கும் மாணவர்களுக்கு இயக்கி காட்டினார்கள்,நானுன் எனது நண்பர்களும் கணணி வைக்கபட்டிருந்த யன்னலுக்கு அருகில் களவாக சென்று அதை பார்த்துவருவோம்.இப்படியாக என் வாழ்வில் கணணி உள்நுழைந்தது.
அதன் பின் அப்படியே இடம் பெயர்வு, அவசரகாலசட்டம் அப்படியே காலம் யுத்தத்துடன் ஓடியது பாடசாலைக்கு கூட பல காலங்கள் போக முடியவில்லை கணணியை பற்றி யார் சிந்திப்பது.
அப்படியே பல வருடங்கள் ஓடிப்போனது.அப்போது எனது வாழ்க்கை யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு நகர்ந்து இருந்தது.
அப்போது வழமையாக மாலை நேரங்களில் காற்பந்து விளையாடுவோம் அதில் அறிமுகமாகிய ஒரு நண்பன் தான் எனக்கு கணணியை அறிமுகம் செய்துவைத்தான். அதுவும் சும்மா அல்ல இணையத்தில் நடிகைகளின் படங்களை பார்க்கலாம் என எனக்கு ஆசை காட்டி அழைத்து சென்றான் நானும் அவனுடன் ஒரு "சைபர் கபே" க்கு சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் காட்டிய வித்தைகளை வியப்புடன் பார்த்துகொண்டிருந்தேன், அவன் என்ன என்ன செய்தான் என்பதை மிகவும் அவதானமாக கவனித்துக்கொண்டே மறுநாள் தனியாக அதே இடத்துக்கு சென்று முயற்சி செய்தேன் முடியவில்லை நடத்துனருக்கு தெரிந்திருக்கவேண்டும் எனக்கு தெரியாது என்று என்னை வெளியில் அனுப்பி விட்டார். மீண்டும் நண்பனுடன் சிலகாலம் தொடர்ந்தேன் படிப்படியாக தனியாக சென்று இயக்கும் அளவுக்கு பழகிவிட்டேன்.
பாடசாலைகாலங்களில் ஆங்கில பாடம் என்றாலும் சரி ஆங்கில ஆசிரியர்கள் என்றாலும் ஏனோ ஒரு வெறுப்பு என்றுமே எனக்கு ஆங்கில பாடத்துக்கு முப்பதுக்கு மேல் மதிப்பெண் வந்ததே இல்லை. இது கணனியில் எனது மேலதிக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது இதுக்கும் இணையத்திலேயே விடை கிடைத்தது. அரட்டையில் பெண்களுடன் பேசவேண்டும் என்ற ஆர்வத்தில் தேவையானவற்றை பழக ஆரம்பித்தேன் ஆங்கிலம் தெரியாது என்று சொன்னால் என்னை கேவலமாக நினைப்பார்கள் என்ற எண்ணம் வேறு. கையில் அகராதியுடன் அரட்டை அடித்த காலங்களும் உண்டு.
வேலையோடு சிலகாலங்கள், வெளிநாடு செல்லும் ஆசையால் கனடா செல்வதாக சில வருடங்கள் முகவர்களுடன் சில நாடுகளில் கடவு சீட்டை தொலைத்துவிட்டு அநாதரவாக சில வருடங்கள் கடந்துவிட்டது . எப்போதாவாதுதான் கணணியை பார்க்கவே முடிந்தது.
பூமி தனது வேலையே சரியாக செய்துகொண்டே இருந்தது பகல் இரவு என்று காலம் உருண்டுகொண்டே போனது. வெளிநாடு செல்ல முடியாமல் சொந்த நாடுக்கு வருவதுக்கே பலத்த போராட்டம். இப்படியாக மீண்டும் கொழும்புக்கு வந்து சேர்ந்தேன்.
மீண்டும் ஒரு வேலையில் சேர்ந்தேன் சொந்தமாக ஒரு கணணியையும் வாங்கினேன் அதிலேயே எல்லாவற்றையும் செய்து பழகினேன். பலவிதமான மென்பொருள்களை தரவிறக்குவதுவும் அதை பயன் படுத்தி பார்ப்பதுவும் பின்பு அழிப்பதுமாக இப்படியே ஓரளவுக்கு கணணியை திருத்தும் அளவுக்கு பிரசித்தம் ஆகிவிட்டேன், பலரது கணணியை திருத்தி கொடுப்பது இப்படியே எனது தேர்ச்சியையும் வளர்த்துக்கொண்டேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது நண்பன் இணையத்தில் ஒரு வலைபூவை ஆரம்பித்துவிட்டு எனக்கு இணையத்தளம் இருப்பதாக பல கவிதைகளை போட்டு காட்டினான். பொறாமையாக இருந்தது, நான் கணணி பற்றி படிக்கவில்லையே என்ற கவலை அதேநேரம் எப்படியும் நானும் அதை பழகவேண்டும் என்ன ஆசையும் அவனிடமே கேட்டு தெரிந்துகொண்டேன் அவனும் எனக்கு ஒரு வலைபூ ஆரம்பித்து அதுக்கு இடிமுழக்கம் என பெயரும் வைத்து கொடுத்தான்.
எனக்கு ஆங்கிலம் இப்போதும் நன்றாக தெரியாது ஆனால் வாசிப்பேன் புரிந்துகொள்வேன் இதுவும் இணையத்தினால்தான்.
இப்போது பல இணையத்தளங்களில் இருக்கும் செய்திகளை எனது தளத்தில் பிரதி செய்து அதை தமிழ்மணத்தில் இணைத்து எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பதை அடிகடி பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன்.
இப்படியே பலர் என் வலை பூவை பார்க்க பார்க்க சந்தோஷ பட்டாலும் உள்ளுக்குள் கவலையாகவே இருந்தது. யாரோ எழுதிய எழுத்துக்கு சந்தோஷ படுகிறோமே.எனக்கு தமிழ் எழுத தெரியும் ஆனால் கட்டுரை,கவிதை இவை எல்லாம் எழுதவே தெரியாது எழுதியும் பழக்கம் இல்லை இலக்கணம், இலக்கியம் என்றால் பெயரளவில் தெரியுமே தவிர அவற்றின் பங்களிப்பு மொழியிலே எப்படிபட்டது எதுவுமே தெரியாது நானெப்படி எழுதுவது என்று எனக்கும் சிந்தித்து சொர்ந்துபோவேன்.
இந்த நேரத்தில் தான் நண்பன் தனது வலை பூவில் தமிழில் எழுதுவதை பார்த்து எப்படி எழுதுகிறாய் என்று கேட்டேன் அவனும் "கூகிளில்" எழுதும் முறையை சொல்லி கொடுத்தான் அதிலே தமிழில் பல சொற்களை எழுதி பழக ஆரம்பித்தேன் இப்போது நினைக்கும் சொற்களை தமிழில் எழுத பழகிவிட்டேன்.
நானும் சிலவற்றை இடையிடையே எனது வலைப்பூவில் எதாவது எழுதிகொள்வேன் அதை யாரவது பார்கிறார்களா என பலமுறை பார்த்து சந்தோஷ பட்டுகொள்வேன். வலைப்பூவை அறிமுகபடுத்திய நண்பன் அதே பெயரில் முகபுத்தகத்தில் ஒரு கணக்கு ஆரம்பித்து இங்கு பதியும் பதிவுகளை அங்கு இணைப்பு கொடுத்து பலர் அவன் வலை பூவை பார்ப்பது போல செய்துகொண்டான் நானும் முகபுத்தகத்தில் இடிமுழக்கத்தை ஆரம்பித்தேன்.
இப்போது முகபுத்தகத்தில் பல நண்பர்களை சேர்க்கும் படலம் எங்கள் அதிவேக நண்பர்கள் இணைப்பால் முகபுத்தக நிர்வாகம் நண்பர்களை இணைப்பதுக்கு அப்பப்ப தற்காலிக தடை விதிப்பதுவும் மீண்டும் நான் இணைப்பதுவும் இப்படியே ஒரு சக்கரமாக நடந்துகொண்டே இருந்தது.
இந்த காலத்தில் முகபுத்தகத்தில் சிறிது சிறிதாக ஒவ்வொருவரின் பதிவுகளில் நான் பதிந்த பின்னூட்டல்கள் பலர் விருப்பம் தெரிவிக்க தெரிவிக்க எனக்குள் எதோ ஒரு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது அதன் பின் எனது எண்ணங்களை எல்லாம் பதிந்தேன் அதுக்கு பலரது விமர்சனங்கள், விருப்பங்கள் அவற்றுக்கு கருத்து சொல்வது வாதம் செய்வது இப்படியாக பல விடயங்கள் பற்றி பலர் பதியும் பதிவுகள் சம்பந்தமான கட்டுரைகளை தமிழில் தட்டச்சு செய்து "கூகுளில்" தேடி வாசித்து தெரிந்துகொண்டு அது பற்றி வாதம் செய்ய அரம்பித்தேன் இதன் காரணமாக பல நண்பர்களும் சில கொள்கை எதிரிகளும் உருவாகினார்கள் அவர்களில் சிலர் என் கணக்கை மொத்தமாக ஐந்து தடவைகள் முடக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த முகபுத்தக ஆர்வம் அதிகரித்த காலத்தில் நான் வலைபூவை மறந்து போனேன் என்றே சொல்லவேண்டும்.
இப்போது எனது முகபுத்தக கணக்கு இறுதியாக முடக்கபட்டு ஆறாவது கணக்கு ஆரம்பித்து இருக்கிறேன் இந்த நேரத்தில் மீண்டும் வலைப்பூவில் எழுத ஆசை வந்துள்ளது.முகபுத்தக கணக்கில் 5000 நண்பர்களும், பக்கத்தில் அண்ணளவாக 1000 நண்பர்களையும் சேர்த்து வைத்து இருந்தேன் அதை இம்முறை இழந்தது மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. முகபுத்தகத்தை திறந்ததுமே அந்த சோகம் தொற்றிகொள்கிறது முதல் கணக்கில் ஒரு பதிவு பதிந்தால் பல விருப்பங்கள், பல பின்னூட்டல்கள் ஒருவித உற்சாகத்தை கொடுத்தது இப்போது புதிய கணக்கில் நண்பர்கள் 200௦௦ பேர் தான் இருக்கிறார்கள்.
நண்பர்களே இணையம் எங்களுக்கு கிடைத்து இருக்கும் ஒரு அருங்கொடை அதை பாவிக்கும் நாங்கள் தான் அதன் மீது பழி போடுகிறோம், பல செய்திகள் வருகின்றன முகபுத்தகத்தால் பல பெண்கள் ஏமாற்ற படுகிறார்கள் பல தவறுக்க நடைபெறுகின்றன,முகபுத்தகத்தை தடை செய்யவேண்டும் உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் முகபுத்தகம் உங்களை ஏமாற்றுகிறதா? நீங்கள் எமாற்றுவதுக்கு முகபுத்தகத்தை பயன் படுத்துகிறீர்களா? பலர் கொலை செய்வதுக்கு கத்தியை பயன் படுத்தினார்கள் என்பதுக்காக அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை தடை செய்யவேண்டும் சொல்வது சரியா?
முன்பெல்லாம் ஒரு விடயம் தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ள அது சம்பந்தமாக படித்தவரிடம் தான் தெரிந்துகொள்ளவேண்டும் இப்போது எந்த விடயத்தையும் இருந்த இடத்திலேயே நாங்களாகவே அறிந்துகொள்கிறோம். இணையம் என்பது ஒரு கொடை அதை நாங்கள் எங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பயன் படுத்தவேண்டும். ஆனால் இப்போதெல்லாம் முகபுத்தகத்தில் பல குழுக்கள் ஆரம்பித்து ஒரே பதிவை பலமுறை பதிந்து உங்கள் நேரங்களையும் வீணாக்குகிறிர்கள். பலர் இனணயத்தளம் பார்ப்பதே இல்லை செய்திகள் படிப்பதே இல்லை எப்போது பார்த்தாலும் முகபுத்தகத்தில் அரட்டை.
ஒன்றுமே தெரியாத நான் இன்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன் என்றால் பல விடயங்கள் தெரிந்த உங்களால் ஏன் முடியாது???
இணையத்தில் இப்போது மொழி அறிவு ஒரு தடை இல்லை எல்லா விடயங்களையும் எங்கள் மொழியிலேயே அறிந்துகொள்ளலாம் வாசியுங்கள் பல விடயங்களை வாசியுங்கள் அறிய அறிய உங்கள் அறிவு வளர்ந்துகொண்டே போகும். உங்கள் கையிலேயே உங்கள் அறிவு இருக்கிறது.
உங்கள் கையிலேயே உங்கள் அறிவு இருக்கிறது.
ReplyDeleteஉண்மை தான்